வவுனியா மாநகர சபையால் இலுப்பையடி வீதியோர வியாபார நிலையங்கள் அகற்றப்பட்ட போது அப் பகுதியில் வீதியோர வியாபாரிகளுக்கும் மாநகர சபையினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் அமைந்திருந்த வீதியோர கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை வவுனியா மாநகர சபையால் இன்றையதினம் (14.07) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த இடத்திலிருந்து வேறு மாற்று இடத்திற்கு சென்று வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஏற்கனவே மாநகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அகற்றப்படாத வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கையை மாநகரபை முன்னெடுத்தது. இதன்போது வீதியோர வர்த்தக நிலைய உரிமையாளர்களால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனால் வர்த்தகர்களுக்கும் மாநகரசபை உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவ்விடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், வீதியோரமாக இருந்த வர்த்தக நிலையங்களும் முழுமையாக இதன்போது அகற்றப்பட்டதுடன் பொலிசார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.





