“அனுதாபம் வேண்டாம், உரிமை தான் வேண்டும்!” – படுக்கையிலுள்ள பொலிஸ் அதிகாரியின் மனைவியின் கண்ணீர் போராட்டம்!

பொலிஸ் கடமையுடன் தொடர்புடைய பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே வாழ்க்கையை கழித்து வரும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு உள்ளிட்ட அனைத்து நிலுவை நன்மைகளையும் விரைவாக பெற்றுத்தருமாறு அவரது மனைவி பொலிஸ் மா அதிபரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

பொரளை பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் பயிற்சிக்குச் சென்று கொண்டிருந்தபோதே குறித்த அதிகாரி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகளால், அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே உள்ளதாகவும், அன்றாட தேவைகளைக்கூட சுயமாக மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது மனைவி சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அவருக்கு இதுவரை முழுமையான சுயநினைவு திரும்பவில்லை எனவும், உணவு உட்கொள்வதற்கும் சுவாசிப்பதற்கும் தொண்டைப் பகுதியில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணவருக்கு முழுநேர பராமரிப்பு தேவைப்படுவதால், அவரை கவனித்துக்கொள்வதற்காக மனைவியால் வேறு எந்தத் தொழிலிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை வீட்டில் வசித்து வரும் இந்தக் குடும்பத்திற்கு தற்போது நிலையான வருமானம் எதுவும் இல்லாத நிலையில், மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை சமாளிப்பது மிகவும் கடினமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்ட பின்னர் மூன்று மாதங்களுக்கான சம்பளமும், விபத்து விடுப்பு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலும் ஆறு மாதங்களுக்கான சம்பளமும் மட்டுமே கிடைத்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு உள்ளிட்ட நன்மைகளைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான நடவடிக்கைகள் இதுவரை நிறைவடையவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

விசேட புலனாய்வுப் பிரிவின் விசாரணை காரணமாக ஓய்வூதிய நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகவும், மருத்துவக் குழு தொடர்பான சில சிக்கல்களால் நஷ்டஈடு தொடர்பான கோப்புகள் பல்வேறு தரப்புகளுக்கு இடையே அனுப்பப்பட்டு வருவதால் நடவடிக்கைகள் மேலும் தாமதமடைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“நாங்கள் அனுதாபத்தைக் கேட்கவில்லை; என் கணவருக்குச் சேர வேண்டிய உரிமையையும், எங்கள் குடும்பத்திற்கான நீதியையுமே கேட்கிறோம்” என அவரது மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளாக உடல்நலப் பாதிப்புடன் படுக்கையில் இருக்கும் பொலிஸ் அதிகாரியின் குடும்பம், மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் போராடி வரும் நிலையில், அவருக்குச் சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் கிடைக்க வேண்டிய நன்மைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பதே குடும்பத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, இந்த மனிதாபிமான விடயத்தை கருத்திற்கொண்டு, பொலிஸ் மா அதிபர் நேரடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலுவையில் உள்ள ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு உள்ளிட்ட ஏனைய உரிமைகளை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இவ்விடயம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும் வகையில், பொதுமக்கள் இந்தச் செய்தியைப் பகிருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!