யாழில் 3 வயது குழந்தையை அடித்ததுடன் அதனால் ஏற்பட்ட காயத்தின் மீது மிளகாய் தூள் பூசி சித்திரவதை செய்ததாக கூறப்படும் கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவ்வாறு குழந்தையை சித்திரவதை செய்தவர் அந்தக் குழந்தையின் தாயின் இரண்டாவது கணவர் என்று கூறப்படுகிறது.
அவருடன் இணைந்து தாயும் குழந்தையை தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர்களின் தாக்குதலில் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டன.
அந்தக் காயங்களின் மீது மிளகாய் தூள் இட்டதுடன் குழந்தைக்கு பச்சை மிளகாயை உண்ணக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சங்கானை பிரதேச செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிரதேச செயலக அதிகாரிகள் வட்டுக்கோட்டை காவல்துறையினரின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றனர்.
இதையடுத்து கிராம சேவகர், பிரதேச செயலக சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டுக்கு சென்ற நிலையில் கணவனும் மனைவியும் அந்த பிள்ளையையும் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
பிள்ளையை அவர்களிடமிருந்து மீட்டு, அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
