மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், மற்றும் வட மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 22) காலை 08.30 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்குக் கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த மட்ட வளிமண்டலக் குழப்பம் மேலும் தீவிரமடைந்து தற்போது ஒரு குறைந்த அழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளது.
இந்தக் குறைந்த அழுத்தப் பகுதியானது மேலும் தீவிரமடைந்து, இலங்கைக்கு அருகில் மேற்கு-வடகிழக்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் தக்கத்தால், நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிகக் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, நாட்டின் 19 மாவட்டங்களுக்கு ‘அதி உயர்’ அபாயத்தைக் குறிக்கும் சிவப்பு எச்சரிக்கையும், 06 மாவட்டங்களுக்கு ‘அதிகரிக்கும் அபாயத்தைக்’ குறிக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கையும் (Amber Alerts) விடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
