2026ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மொத்தம் 147 நாடுகள் கலந்துகொண்ட இந்த ஆய்வில் இலங்கை 134வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டு இருந்த 133வது இடத்தை விட ஒரு படி குறைவாகும். இலங்கையுடன் எத்தியோப்பியாவும் இதே தரவரிசையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

இந்தத் தரவரிசைப் பட்டியலில் 10 புள்ளிகளுக்கு இலங்கை வெறும் 4.0 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. தெற்காசியாவின் மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நேபாளம் 92வது இடத்திலும், பாகிஸ்தான் 109வது இடத்திலும், இந்தியா 118வது இடத்திலும் உள்ளன. சீனா 68வது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளும் 134வது இடத்தில் உள்ளன.
Happiness by Country
Global Happiness Score (0-10 Scale)
வழக்கம் போலவே ஐரோப்பிய நாடுகள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. பின்லாந்து நாடு தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, டென்மார்க், கோஸ்டாரிகா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நலவாழ்வு ஆராய்ச்சி மையத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, ஆறு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆயுட்காலம், சமூக ஆதரவு, தனிமனித சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் பற்றிய மக்களின் பார்வை ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவை மக்களின் மகிழ்ச்சிக் குறியீடு குறைய முதன்மைக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
