அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகள் அனைவரும் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
இதன்படி, இதன் சட்டபூர்வமான நிலையை ஆராய அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் சுமார் 50 சட்டத்தரணி கொண்ட குழுவை அணுகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகளுக்காக முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் இணைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மலர் சாலையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், அரசாங்கம் நினைப்பது போல் அதை செயல்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அடுத்த 14 நாட்களுக்குள் இந்த புதிய சட்டமூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முன்னாள் ஜனாதிபதிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.