கல்கிஸ்சை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பல் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு முயற்சி ஒன்று துப்பாக்கி இயங்காததால் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது வீட்டின் மேல்மாடியில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் “நீ சமிந்ததானே?” எனக் கேட்டு அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றுள்ளனர். அந்தச் சமயத்தில் அவர் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளார்.
பிஸ்டல் ரக துப்பாக்கியை ஒத்த துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்த போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை. இச்சம்பவம் குறித்து அயலவர் ஒருவர் கல்கிஸ்சை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கியுள்ளார்.
துப்பாக்கிதாரிகள் வீட்டிற்குள் நுழைந்த போது குறித்த நபரை காலால் உதைத்துள்ளதுடன், அருகிலிருந்த நாற்காலி ஒன்றினால் தாக்கியுள்ளனர். இதில் வீட்டின் உரிமையாளரின் தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான அவர், அங்கிருந்து தப்பிச் சென்று அருகில் உள்ள தனது நண்பரின் வீட்டில் சென்று மறைந்திருந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் அந்த வீட்டிற்கும் சென்று கதவைத் தட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் குளிரூட்டி பழுதுபார்க்கும் நபர் எனத் தெரியவந்துள்ளது.
வீட்டின் உரிமையாளர் இதற்கு முன்னர் கைது செய்யப்படாவிட்டாலும், அவரது மகன் 2024.01.26 அன்று கஞ்சா கடத்திய குற்றத்துக்காகவும்,2025.05.12 அன்று கொலைக் குற்றச்சாட்டிற்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காகவும் இரு சந்தர்ப்பங்களில் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் கல்கிஸ்சை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
