2026 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வடக்கு, கிழக்கிற்கான ரயில் சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்துப் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் 2026 பெப்ரவரி முதலாம் திகதி முதல் தலைமன்னாருக்கான ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பிரதியமைச்சர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டில் ஏற்பட்ட தித்வா சூறாவளி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் மத்திய மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று போக்குவரத்து அமைச்சின் கீழ் வரும் செயற்பாடுகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான மற்றும் சிறு வீதிகள், பாலங்கள்,ரயில் பாதைகள் என பெருமளவில் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள ஏ மற்றும் பி தரத்திலான வீதிகள் சேதமடைந்துள்ளன. அண்ணளவாக 1450. 6.4 கிலோமீற்றர் வீதிகள் சேதமடைந்துள்ளன.மத்திய மாகாணத்தில் பெருமளவிலான வீதிகள் சேதமடைந்துள்ளன.மலைகளுக்கு நடுவில் வீதிகளை அமைத்ததன் விளைவையே நாடு தற்போது எதிர்கொண்டுள்ளது.அந்த வகையில் இனி வீதி அபிவிருத்தியின் போது எதிர்கால திட்டமிடல் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும். சேதமடைந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 6900 கோடி ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சூறாவளியின் தாக்கத்தினால் ரயில்வே திணைக்களம் பில்லியன் கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ரயில் பாதைகள், பாலங்கள், சமிக்ஞை கோபுரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மலையக ரயில் பாதையின் இரும்பு தண்டவாளங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.
ரயில் பாலங்களை புனரமைப்பதற்கு மாத்திரம் 600 கோடி ரூபா செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.சேதமடைந்த ரயில் பாதைகளை விரைவாக புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த நடவடிக்கைகளில் இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குகி வருகின்றனர். வடக்கு, கிழக்கிற்கான ரயில் சேவைகள் 2026 ஜனவரி முதலாம் திகதியிலும் தலைமன்னாருக்கான ரயில் சேவைகள் 2026 பெப்ரவரி முதலாம் திகதியிலும் முழுமையாக ஆரம்பிக்கப்படும். மலையகத்துக்கான ரயில் சேவையை ஆரம்பிக்கும் பணிகள் துரிதப்படுதப்படுத்தப்பட்டுள்ளன.
