ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு, தங்கியிருந்த விடுதியில் பெண் ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கண்டி, பல்லேகலை பகுதியில் உள்ள ‘கோல்டன் கிரவுன்’ (Golden Crown) நட்சத்திர விடுதியில் பாகிஸ்தான் அணி தங்கியிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அணிக்கு எதிரான சுப்பர்-8 சுற்றுப் போட்டிக்கு முன்னதாக, விடுதியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம் குறித்த வீரர் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் உதவி கோரி சத்தமிட்டதையடுத்து, ஏனைய ஊழியர்கள் அங்கு வந்து அவரை மீட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விடுதியின் நிர்வாகம் பாகிஸ்தான் அணியின் முகாமையாளர் நவீட் சீமாவிடம் (Naveed Cheema) முறையிட்டது.
விடுதியின் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய போதிலும், முகாமையாளர் வீரர் சார்பாக மன்னிப்பு கோரியதுடன், அவருக்கு அபராதமும் விதித்து விடயத்தை அப்போது சுமுகமாக முடித்து வைத்துள்ளார்.
குறித்த வீரரின் பெயர் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் திரும்பியதும் அவர் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு முன்னிலையில் முன்னிலையாக வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் வெளியேறியுள்ள நிலையில், இவ்வாறான ஒழுக்கவீனச் சம்பவங்கள் அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
