மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்கள் இலங்கையையும் பாதித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், நிலவும் சவால்களை முறியடிப்பதற்கான அரசாங்கத்தின் அவசரத் திட்டங்களை நாட்டு மக்களுக்கு விரிவாக விளக்கினார்.

போர்ச் சூழல் பாதிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கைக்கு வரவிருந்த தொண்ணூறாயிரம் மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் ஏற்றிய இரண்டு பிரதான கப்பல்கள் வருகை தருவதில் பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவும், மின்சார உற்பத்தியை தடையின்றி முன்னெடுப்பதற்காகவும் அரசாங்கம் பல கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு, எரிபொருள் பாவனையை பெருமளவில் குறைக்கும் நோக்கில் எதிர்வரும் வாரங்களில் இருந்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.
அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைப்பதன் மூலமும், பொதுப் போக்குவரத்து முறைகளை அதிகம் பயன்படுத்துவதன் மூலமும் இந்த இக்கட்டான காலப்பகுதியை கடக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தற்போது கையிருப்பில் உள்ள டீசல் முப்பத்தி மூன்று நாட்களுக்கும், பெட்ரோல் இருபத்தி ஏழு நாட்களுக்கும் போதுமானதாக உள்ள போதிலும், எதிர்வரும் இரு வாரங்களுக்குள் மேலதிக கப்பல்கள் நாட்டை வந்தடையும் வரை எரிபொருள் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கியூஆர் (QR) முறையினூடாக எரிபொருள் விநியோகத்தை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்க பாதுகாப்புப் படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதோடு, எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தனது உரையில் உறுதியளித்தார்.
இறுதியாக, இனம் மற்றும் மத பேதமின்றி அனைத்து மக்களும் இந்த தேசிய நெருக்கடியின் போது அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். எரிபொருள் மற்றும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் ஒரு பாரிய சரிவில் இருந்து பாதுகாக்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.
