ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய அரசுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் தெஹ்ரான் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம்,
“அமெரிக்கா இதுவரை எங்களுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை; கையெழுத்திட்ட எந்த ஒப்பந்தத்தையும் மதிக்கவில்லை. எனவே, தூதரகப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், அமெரிக்காவை நாங்கள் முழுமையாக அவநம்பிக்கையுடனேயே அணுக வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
“எங்கள் நாட்டின் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், நாங்கள் இன்னும் அதிக வலிமையுடன் முன்னோக்கிச் செல்வோம். இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் கோரிக்கைகளுக்குப் பணிய வேண்டியிருக்கும்,” என இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“இரண்டு வாரங்களுக்கு முன்பு ட்ரம்ப் எங்களை கற்காலத்திற்கு அனுப்பப்போவதாக மிரட்டினார். ஆனால் இறுதியில் அவர்தான் பணிந்து வந்து எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார். அவரை அடிபணிய வைத்தால் மட்டுமே அமைதி திரும்பும்,” என மற்றுமொரு பெண் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை மற்றும் சமீபத்தில் ஈரானியக் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தால் ஈரானிய மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் தெஹ்ரானின் முக்கிய சதுக்கங்களில் திரண்ட மக்கள், அமெரிக்காவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அரசாங்கம் எந்தச் சூழலிலும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணிந்துவிடக் கூடாது என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
