இரத்தினபுரி, குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான பதற்றநிலையைத் தொடர்ந்து, அதிகாரிகள் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் திடீரென பதற்றமான சூழ்நிலை உருவான நிலையில், பாதுகாப்புத் தரப்பினரால் அது உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. எனினும், இன்று காலை மீண்டும் கைதிகள் ஒன்றிணைந்து சிறைச்சாலைக்குள் கலவரத்தில் ஈடுபட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தப்பட்டது. இந்த மோதலின் போது கைதிகள் சிலர் குருவிட்ட சிறைச்சாலை வைத்தியசாலைச் சொத்துக்களுக்குப் பலத்த சேதம் விளைவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த நான்கு கைதிகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து குருவிட்ட சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரும் சிறைச்சாலைத் திணைக்களமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
