மட்டக்களப்பு – கல்குடா, கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றியவாறு (charge) மார்பில் வைத்துக்கொண்டு உறங்கிய இளைஞர் ஒருவர், தொலைபேசி வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் சம்பவத்தன்று மாலை வீட்டில் உறங்குவதற்காகச் சென்றபோது, தனது கையடக்கத் தொலைபேசியை மின் இணைப்பில் மின்னேற்றியவாறு அதனை தனது நெஞ்சில் வைத்துக்கொண்டு உறங்கியுள்ளார்.
இந்த நிலையில், கையடக்கத் தொலைபேசி அதிக வெப்பமாகி வெடித்ததில் காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் உடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
