முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது, சகோதரர் ஒருவர், கிராம சேவையாளரான தனது சகோதரியை கத்தியால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த சகோதரி முதலில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர், தாக்குதலை மேற்கொண்ட சகோதரர் அச்சம் காரணமாக யாரும் இல்லாத நேரத்தில் குமுழமுனையில் உள்ள தமது வீட்டு கிணற்றுக்குள் விழுந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு நாட்களாக காணாமல் போன அவரை உறவினர்கள் தேடிய நிலையில், நேற்றையதினம் (12) வீட்டுக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர், 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
