QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் முகாமைத்துவ முறையின் கீழ் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு, தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்தைப் பேணுவதற்குப் போதுமானதாக இல்லை என முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வாரத்திற்கு 15 லீற்றர் எரிபொருள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், முச்சக்கர வண்டி ஓட்டுதலையே முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களுக்கு இந்த அளவு மிகவும் குறைவானது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வழமையான சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க வாரத்திற்கு குறைந்தது 35 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒதுக்கீட்டில் திருத்தம் செய்யப்படாவிட்டால், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஓட்டுநர்களைப் போன்றே, பாடசாலை போக்குவரத்துச் சேவையாளர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் தற்போதைய ஒதுக்கீடு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
பாடசாலை பேருந்துகளுக்கு வாரத்திற்கு வழங்கப்படும் 60 லீற்றர் டீசல், மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கும் வழமையான வழித்தடங்களில் பயணிப்பதற்கும் போதுமானதாக இல்லை.
எனவே, இதனை 100 லீற்றராக அதிகரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்படாவிட்டால், மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் இருப்பு காரணமாகச் சில பேருந்து சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையில் மீண்டும் QR முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், பல்வேறு துறையினரின் இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
