தேயிலைப் பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் திங்கட்கிழமை (16) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிவான் கட்டளையிட்டார்.

அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளை தேயிலைப் பைகளில் மறைத்து நீண்டகாலமாக கடத்தி வருவதாக அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு (D.C.D.B) இரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 48 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொதிகள் மீட்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கிழக்குப் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோரின் வழிகாட்டலில், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் மேற்பார்வையில் இச்சோதனை நடத்தப்பட்டது.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய, அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான குழுவினர் இந்த அதிரடிக் கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
(செய்தித் தகவல்: பாறுக் ஷிஹான்)
