2026 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மற்றும் பிரிவெனாக்களிலுள்ள மாணவர்களுக்கு பாதணிகளைப் பெறுவதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு சோடி பாதணிகளைப் பெறுவதற்கான வவுச்சர்களை 2025 ஆம் ஆண்டின் பாடசாலை தவணை முடிவதற்குள் பயனாளிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வவுச்சர்கள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தயாரித்துள்ள நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ‘பரிசு அட்டைகள் கைப்பேசி செயலி’ மூலம் ஸ்கேன் செய்யக்கூடிய வகையில், கியூ.ஆர். குறியீட்டு இலக்கத்துடன் பாதுகாப்பாக அச்சிடப்பட்டு பயனாளிகளான மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த திட்டத்தின் கீழ் பின்வரும் வகையில் மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் நாடு முழுவதுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 250 இற்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் 644,000 மாணவர்கள்.
மாணவர்களின் எண்ணிக்கை 251 – 500 வரை உள்ள தோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 53,093 மாணவர்கள்.
விசேட தேவைகள் உள்ள மாணவர்கள் கல்வி பயிலும் 30 பாடசாலைகளைச் சேர்ந்த 2,300 மாணவர்கள்.
பிரிவெனாக்களில் தெரிவு செய்யப்பட்ட 30,000 மாணவர்கள் இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.