வங்காள விரிகுடாவில் நாளைய தினம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தாழமுக்கம் இன்று உருவாகியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு அடுத்த சில நாட்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இது நாளை இரவு அல்லது நாளை மறுநாள் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தமிழ்நாட்டின் சென்னை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத் தாழமுக்கம் நகரும்போது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கடற்பகுதிகளை அண்மித்தே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை நாளை இன்று முதல் செறிவடைந்து 24 ஆம் திகதி வரை தொடரும்.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு அடுத்த சில நாட்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
அதே வேளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பரவலாக பருவ மழை கிடைக்கும்.
அத்தோடு எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கமும் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
