இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (23) இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

“அயல் நாட்டின் உறவுக்கு முதலிடம்” என்ற கொள்கையை வலியுறுத்தி, ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பேரழிவை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் அடுத்தகட்ட பணிகளை ஆராய்வதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, மில்லியன் கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து ‘ஒப்பரேஷன் சாகர் பந்து’ நடவடிக்கையை ஆரம்பித்து, இந்தியா உடனடியாக இலங்கைக்கு ஆதரவளித்ததுடன் மனிதாபிமான உதவிகள், அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, அனர்த்தத்திற்குப் பின்னரான புனரமைப்புப் பணிகள், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் விஜயமானது இந்தியாவின் “அயலுறவுக்கு முதலிடம்” கொள்கை மற்றும் பகிரப்பட்ட கடல்சார் நலன்களைப் பிரதிபலிக்கும் வகையில், தொடர்ச்சியான புனரமைப்பு உதவிகள் மீது கவனம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
