ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் (IGRC) தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகர இராணுவத்தின் ‘பார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனத்தின் பதிவின் படி, மத்திய ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போதே இந்த அதிநவீன போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் போர் விமானம் முற்றாக அழிக்கப்பட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதால், அதன் விமானி குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, விமானம் வீழ்ந்து வெடித்த வேகத்தைப் பார்க்கும்போது, விமானி அதிலிருந்து வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என ஈரானின் ‘மெஹ்ர்’ (Mehr) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகர இராணுவத்தின் இந்தப் புதிய உரிமைக்கோரல் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (US Central Command) உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
எவ்வாறாயினும், அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் முன்னதாக வெளியிட்டிருந்த தகவலை அமெரிக்கா மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
