அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் ஆளுனர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.
கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆரம்பமான வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் மலிவுத் திறன் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரது பிரச்சாரம் அமைந்திருந்தது.
தனது முற்போக்கு கருத்துகளால் நியூயோர்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் ஸோரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவிலான வாக்குகளாக 20 இலட்சம் வாக்குகள் பதியப்பட்டதாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்; தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து).
இதனிடையே, ஸோரான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும்நிலையில், மேயர் தேர்தலில் ஸோரான் வெற்றி பெற்றால், நியூயோர்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்தி விடுவதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
