மலையகத் தமிழர்களுக்கு அவர்கள் பிறந்த மண்ணிலேயே வாழ நிலம் கேட்டுப் பெறுவது நியாயமான உரிமை என்றும், அரசு நிலம் வழங்க மறுத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்துக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயமொன்றின்போது, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை குழுவொன்றை சந்தித்து உரையாடியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மலையகத் தமிழர்கள் கடின உழைப்பாளிகள் என்றும், அவர்களுக்கு விவசாயம் செய்யவும், பாதுகாப்பாக வாழவும் சொந்த காணிகள் தேவை என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காணி வழங்குவது குறித்து தான் ஜனாதிபதியிடம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மலையகத்தில் காணி கிடைக்காதபட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறுவது ஒரு சாத்தியமான மாற்றாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் காணி வழங்க முன்வந்தால், அந்த காணிகளை மலையக மக்களுக்குப் பெற்றுத்தரத் தாம் தயாராக இருப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
