வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி சுரேஸ் தெரிவித்தார்.

எனினும், இந்த மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் மது விருந்துபச்சாரம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த மாணவனுக்கு மது கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
நள்ளிரவு 12 மணியளவில் குறித்த மாணவனை பிறிதொரு மாணவனின் விடுதியில் மாணவர்கள் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
சனிக்கிழமை காலை குறித்த மாணவன் எழுந்திருக்காத நிலையில் ஏனைய மாணவர்கள் குறித்த மாணவனை பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பூவரசங்குளம் பொலிஸார், தெரிவித்தனர்.
மாணவர் உயிரிழந்தபோது, அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும், இந்தத் திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விசாரணையின் போது, உயிரிழந்த மாணவரின் சகோதரி, கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து வவுனியா ஆதார வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது, அங்குள்ள வைத்தியர் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தார்.
