மஹியங்கனை – பதுளை வீதியில் மாபாகடவெவவின் 17வது தூணுக்கு அருகில் உள்ள மகாவலி வியன்னா கால்வாயில் விழுந்து பல்கலைக்கழக மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனவர் ரஷ்மி லக்ஷிகா மெண்டிஸ் என்ற 26 வயதுடைய ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஆவார்.
காணாமல் போன இளம் பெண், தனது காதலனுடன் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து மஹியங்கனை வழியாக ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு தனது காதலனின் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மாபாகடவெவ 17வது தூண் பகுதியில் உள்ள மகாவலி வியன்னா கால்வாயை வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார்.
பின்னர், அவர்கள் இருவரும் கால்வாய் அணைக்கு சென்று, கால்வாய் வழியாக மேல்நோக்கி நடந்து சென்ற போது, காதலன் கால்வாய்க்குள் விழுந்துள்ளார்.
இதனைதொடர்ந்து, காதலி தனது காதலனைக் காப்பாற்றும் முயற்சியில் கால்வாய்குள் குதித்துள்ளார்.
அதன்போது, நீந்த முடியாமல் இருவரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது, குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண் அலறி அடித்து அருகில் இருந்தவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த மாபாகடவெவ காவல்துறை கல்லூரியின் குழுவொன்று கால்வாயில் தத்தளித்துக் கொண்டிருந்த இளைஞனை மீட்டதாகவும், இளம் பெண் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, காணாமல் போன யுவதி தொடர்பான மீட்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.