பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்ளையிட்ட சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவுஸ்திரேலியாவில் இருந்து விடுமுறையில் நாடு திரும்பியவர், மற்றவர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரின் மகன் என தெரிய வந்துள்ளது.
இருவராலும் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில், 5 நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கிட்டத்தட்ட 15 ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட போலியான எண் தகடுகள் பொறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், இரண்டு முகக்கவசங்கள், 10,900 மில்லிகிராம் போதைப்பொருள், ஒரு கைப்பை மற்றும் இரண்டு போக்குகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், ஒரு நாளைக்கு இவர்கள் சுமார் 20 பொதி போதைப்பொருட்களை உட்கொள்வது என்பன விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
பிலியந்தலை பொலிசார் நடத்திய விசேட தேடுதலின் போது இருவரும் தற்செயலாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக இந்தத் திருட்டுகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
பொரலஸ்கமுவ, மிரிஹான, பொரல்ல, அதுருகிரிய, தலங்கம மற்றும் பிலியந்தலை பொலிஸ் பிரிவுகளில் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளே கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட கைப்பைகளில் இருந்து பணம் மற்றும் மொபைல் போன்களை எடுத்து, பைகளை போல்கொட ஆறு மற்றும் பல்வேறு வனப்பகுதிகளில் வீசியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
25 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதுடன் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.