பண்டாரவளை அருகே 450 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டியொன்று சறுக்கி வீழ்ந்ததில், நபரொருவர் உயிரிழந்து, இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை (04) அதிகாலை, பண்டாரவளை அருகே ஹாலிஎல, நெலுவ ஊடாக பண்டாரவளை செல்லும் வீதியின் சாந்த ஜேம்ஸ் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பசறை பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி, சுமார் 450 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன், அவரது இரு சிறு பிள்ளைகளும் முச்சக்கர வண்டியின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை, செல்சி வத்தையின் கீழ் பிரிவில் வசித்து வந்த சம்சுதீன் ஜவ்பர் (41) என்பவரே இவ்விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
