கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள அனேகல் பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 28) என்பவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து, அவரது தலையை காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கர், தனது 26 வயதான மனைவியுடன் ஹீலலிகே என்ற கிராமத்தில் வீடு வாடைக்கு எடுத்து வசித்து வந்தார். தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஜூன் 3ஆம் தேதி, “நான் வேலைக்குச் செல்கிறேன்; நாளை காலைதான் வருவேன்” என்று கூறி வேலைக்குச் சென்ற சங்கர், வேலை விரைவில் முடிந்ததால் அன்று இரவே வீடு திரும்பினார்.

வீட்டிற்கு வந்த போது, சங்கருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வீட்டில் வந்தபோது, தனது மனைவி மற்றொரு ஆணுடன் இருப்பதைக் கண்டு கடும் கோபத்திற்கு ஆளாகி, மனைவியுடன் சண்டையில் ஈடுபட்டார். தொடர்ந்து தகராறுகள் நடைபெற்று வந்த நிலையில், மனைவி சில நாட்களுக்கு முன்பு வீடு விட்டு வெளியேறியதுடன், அடிக்கடி வந்து சங்கருடன் வாக்குவாதம் செய்து வந்தார்.
இதுவே நேற்று மீண்டும் நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மோதலால் கடும் கோபமடைந்த சங்கர், மனைவியை தாக்கியதுடன், பின்னர் கூரிய ஆயுதத்தை கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்தார். சம்பவத்திற்குப் பிறகு, தனது மனைவியின் தலையை பைக்கில் வைத்து அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்தார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கரைக் கைது செய்துள்ளனர். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
