செம்மணி பகுதியில் நாளை(23) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் அணிதிரளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில் முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும்,செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும் நாடக அளிக்கையும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் போராட்டத்தின் இறுதி நாளன்று ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர்டர்க் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.