தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
2017-ல் நடந்த இந்த கொடூர சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம், 2020-ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து வந்தார். அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்வார்.
இறந்தவர்களில் எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவர். பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பின்னரே அவர் அவர்களைக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் காதலன் இதைப் பற்றி அறிந்ததும், அவரையும் கொன்று, ஆதாரங்களை அழிக்க முயன்றார்.

2017ல் போலீசார் ஷிரைஷியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியபோது இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
வீட்டை சோதனை செய்தபோது, குளிர்சாதன பெட்டிகளில் ஒன்பது உடல்கள் துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.
ஜப்பானில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிக தற்கொலை விகிதங்களில் ஜப்பான் ஒன்று. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது.