நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்றைய தினம் அமைதிக்கான நோபல் பரிசு தொடர்பில் அறிவிப்பு வெளியாகியது.

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுவேலா எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா தெரிவாகியுள்ளார்.
சுமார் 7 போர்களைத் தான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டு தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வந்தார்.
அவர் மாத்திரம் இன்றி பாகிஸ்தான், இஸ்ரேல், ஆர்மீனியா, மற்றும் அசர்பைஜான் உள்ளிட்ட நாடுகளும் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என கூறிவந்தன.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலும் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
எனினும் இவ்வாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலா எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா வசமாகியது.
வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஊக்குவித்ததற்காகவும், சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றத்தை நோக்கி அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நோபல் குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நோபல் பரிசுக்காகக் காத்திருந்த ட்ரம்பின் கனவு கலைந்தது.
வரலாற்று ரீதியாக, நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள் மட்டுமே அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
இவர்களில் தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் அடங்குவர்.
அந்த வரிசையில் ட்ரம்ப் இடம் பிடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.