கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்ற சுயவிளம்பரத் தீர்க்கதரிசி, 2025 டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) அன்று உலகம் முழுவதும் விவிலிய காலத்தைப் போன்ற ஒரு பெரும் ஜலப்பிரளயம் (Flood) ஏற்படும் என்று கணித்திருந்தார். இந்நிலையில், அவர், மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் பீதியையும் கிளப்பியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எபோ நோவா, டிசம்பர் 25 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தொடர் மழை பெய்து உலகம் அழியும் என்றும், அதிலிருந்து தப்பிக்கத் தான் கட்டும் ‘பேழையில்’ (Ark) ஏற வேண்டும் என்றும் கூறி வந்தார்.
மக்களை நம்ப வைப்பதற்காக அவர் சுமார் 10 பெரிய மரப் பேழைகளைக் கட்டி வந்தார். அதில் இடம் பிடிப்பதற்காக பல அப்பாவி மக்கள் தங்கள் வீடு, நிலம் மற்றும் நகைகளை விற்று அவரிடம் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
பேழைகளைக் கட்ட வாங்கிய நன்கொடைப் பணத்தில், அவர் சுமார் $100,000 மதிப்புள்ள மெர்சிடிஸ் (Mercedes) காரை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் அன்று அவர் சொன்னபடி எந்தப் பிரளயமும் ஏற்படவில்லை. மாறாக, “கடவுள் எனக்கு இன்னும் கால அவகாசம் கொடுத்துள்ளார், எனவே அழிவு தள்ளிப்போடப்பட்டுள்ளது” என்று அவர் மழுப்பினார். பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது மற்றும் மோசடி புகார்களின் அடிப்படையில் கானா நாட்டுப் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
