பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவுக்கு சொந்தமான CTB பேருந்து இன்று காலை சேவைக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லும்போது காணாமல் போய்வுள்ளதாக பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

காலை சுமார் 8 மணியளவில் தியத்தலாவ வெலிஹெல்கம பகுதியில் உள்ள ஆள்நடமாட்டமற்ற இடத்தில் அந்த பேருந்து இருப்பதாக பண்டாரவளை பொலிஸ் குற்றபிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிசாரும்,பண்டாரவளை CTB டிப்போ ஊழியர்களும் சென்று பேருந்தை பரிசோதனை செய்துள்ளனர்.
இதன் போது பேருந்தின் முன்பக்க கதவு பகுதியில் சேதம் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 12.20 மணி அளவில் அந்த பேருந்து அப்புத்தளை மேல் பாதை காஹகல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சிற்றுந்தொன்றில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பேருந்தை கொண்டு சென்றவர்கள் யார், எதற்காக கொண்டு சென்றனர் என்ற தகவல்கள் இதுவரையில் வெளியாகாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
