மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசைகளில் நிற்பதைக் காணமுடிகிறது.

இது குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண இன்று (02) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் போது மட்டுமே கியூ.ஆர். முறையைப் பயன்படுத்தி விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தற்போது இலங்கையிடம் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், அதனை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டுமே வருங்காலத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த இரண்டு நாட்களின் விநியோக விபரங்களை அவர் வெளியிட்டார்.
இன்று (02) காலை 9.45 மணி வரை டீசல் 2,925,349 லீற்றர், பெட்ரோல் (92 ஒக்டேன்) 2,904,000 லீற்றர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நேற்று ( 01) டீசல் 3,081,349 லீற்றர், பெட்ரோல் (92 ஒக்டேன்) 3,920,400 லீற்றர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரமின்றி வீடுகளில் எரிபொருளைச் சேமித்து வைப்பது சட்டவிரோதமானது மற்றும் பாரிய தீ விபத்துகளுக்கு வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சட்டவிரோதமாக எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாராவது சட்டவிரோதமாக எரிபொருளைப் பெருமளவில் பதுக்கி வைத்திருந்தால், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
“எங்களிடம் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற முறையில் பதற்றமடைந்து நீண்ட வரிசைகளில் காத்திருப்பது கவலையளிக்கிறது. எரிபொருள் விநியோகம் வழமை போலவே தடையின்றி முன்னெடுக்கப்படும்” என டி.ஜே.ராஜகருண மீண்டும் வலியுறுத்தினார்.
