பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருந்த போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஒரு கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் இந்த தாக்குதல் நடவடிக்கை பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல் படை இன்று புதன்கிழமை (22) காலை இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் (UKMTO) தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர்நிறுத்தத்தை ‘காலவரையின்றி’ நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இத்தாக்குதல் வேளையில், ஈரானிய துப்பாக்கிப் படகானது சம்பந்தப்பட்ட கொள்கலன் கப்பலுக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் வழங்காமல் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் மேலும் கூறியுள்ளது.
கடந்த வார இறுதியில் ஈரானிய கொள்கலன் கப்பல் ஒன்றை அமெரிக்க இராணுவம் தாக்கிப் கைப்பற்றியது. அத்துடன் இந்தியப் பெருங்கடலில் ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா சோதனையிட்டதற்கும் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.
இன்று ஈரானால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கொள்கலன் கப்பலின் மேல்தளம் சேதமடைந்ததாகவும் எனினும் அதிர்ஷ்டவசமாக, எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கப்பல் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
டிரம்ப் அறிவித்த போர்நிறுத்த நீட்டிப்பு குறித்து ஈரான் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை. உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் போரைத் தொடங்க இரு நாடுகளும் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளன.
அத்துடன் ஹோர்முஸ் நீரிணை மீது தங்களுக்குள்ள இறையாண்மையை “சட்டப்பூர்வமாக நிலைநாட்டியுள்ளதாக” ஈரானின் ஃபார்ஸ் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
