இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில், சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் (Comorbidities) ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மாநில சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ஆந்திராவில் 67 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்றொருவருக்கு வெளிமாநிலத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 12 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வீட்டுத் தனிமையிலும், இருவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதோடு, மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சிய நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் புதிய அலைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், பாதிப்புகள் ஆங்காங்கே தனித்தனியாகவே பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அடிப்படை சுகாதார நெறிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
