வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலை பெண் ஆசிரியைகள் மற்றும் வைத்தியசாலை பெண் உத்தியோகத்தர்களைக் குறிவைத்து, தொலைபேசி வாயிலாக அநாகரிகமான முறையில் பேசி தொந்தரவு செய்யும் தொடர் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர்கள் மற்றும் வார்ட் பொறுப்பாளர்களை நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் தொடர்பு கொண்டு குழப்பம் ஏற்படுத்திய அதே **076 029 1757** என்ற தொலைபேசி இலக்கம், தற்போது பாடசாலை பெண் ஆசிரியைகளையும் குறிவைத்து இயங்கி வருகின்றது. வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்குத் தொடர்பு கொள்ளும் குறித்த மர்ம நபர், “நான் உங்களிடம் படித்த பழைய மாணவன், உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா?” என்று நயமாகப் பேசி அறிமுகமாகி, பின்னர் ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பேசித் தவறாக வழிநடத்த முற்படுவதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சந்தேகத்திற்கிடமான இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் எனவும், தெரியாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் உடனடியாக அந்த இலக்கங்களைத் தடை செய்யுமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தொடர்ச்சியாகப் பெண்களை இலக்கு வைத்து இவ்வாறான வக்கிரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் மர்ம நபர் தொடர்பில் இலங்கை பொலிஸாரும் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து, குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
