தங்க நகைகள், பணத்திற்காக முன்னாள் ஊழியரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்!

“வீடு கட்டும் ஒப்பந்தத்தை பார்வையிட வேண்டும் என கூறி அழைத்துச் செல்லப்பட்ட கமல் சம்பத்தின் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும், அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர்.

தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கவே இந்தக் கொலையைச் செய்தோம்,” என்று குருநாகல் தொழிலதிபர் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 29 வயது இளைஞர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதன்படி, திருடப்பட்ட 4.8 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகள், 1.4 மில்லியன் பணம் மற்றும் ஒரு கையடக்க தொலைபுசி ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குருநாகல் – மில்லாவ பகுதியில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை கடத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை காரில் வைத்து எரித்து, ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களை கொள்ளையடித்த 19 மற்றும் 29 வயதுடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் நேற்று (30) பொலிஸால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்தக் குற்றத்தைச் செய்த 29 வயதுடைய பிரதான சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட கமல் சம்பத் குருப்புவின் ஹோட்டலின் முன்னாள் ஊழியர் ஆவார்.

தொழிலதிபரின் தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 29 வயது பிரதான சந்தேக நபர், ஐந்து மாதங்களுக்கு முன்பு சம்பத் குருப்புவுக்குச் சொந்தமான ஹோட்டலில் பணிபுரிந்தார். பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளார். எனினும் தொழிலதிபருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.

பிரதான சந்தேக நபர், மஹாவா பகுதியைச் சேர்ந்த 19 வயது நண்பருடன் சேர்ந்து தொழிலதிபரை கொலை செய்து அவரது தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தார்.

இதன்படி, கடந்த 25ஆம் திகதி காலை, 29 வயதுடைய சந்தேக நபர், தொழிலதிபரின் தொலைபேசியில் அழைத்து, ஒரு நண்பருக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட விரும்புவதாகக் கூறி, அதை ஆய்வு செய்ய வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஒப்பந்த வீடு கட்டும் தொழிலை நடத்தி வந்த சம்பத் குருப்பு, அன்று காலை தனது தலைமுடியை வெட்டிக் கொண்டு 29 வயது இளைஞரை சந்திக்க சென்றுள்ளார்.

கந்துபோடா பகுதியில், இரண்டு சந்தேக நபர்களும் தொழிலதிபரின் ஜீப்பில் ஏறி, வெறிச்சோடிய காணி உள்ள ஒரு பகுதிக்குச் சென்றிருந்தனர்.

அந்த நேரத்தில், ஜீப்பின் பின்னால் இருந்த 19 வயது இளைஞர் தொழிலதிபரின் கழுத்தில் நைலான் கயிற்றைக் கட்டியுள்ளார். மேலும் முக்கிய சந்தேக நபர் அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்துள்ளார்.

அதே பிற்பகலில், தொழிலதிபரின் உடலை ஜீப்பில் வைத்து மஹாவா பகுதிக்கு கொண்டு சென்று, அவர் அணிந்திருந்த தங்க நகைகள், பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்து, அவரது உடலை வாகனத்தில் வைத்து எரித்துவிட்டுத் தப்பி சென்றுள்ளனர்.

இந்த மர்ம மரணம் தொடர்பான விசாரணைகள் வடமேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி திரு. அஜித் ரோஹனவின் முழு மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

விசாரணைகளின் அடிப்படையில் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டவரிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன, மேலும் அடகு வைக்கப்பட்ட தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட சுமார் 1.4 மில்லியன் ரூபாய் பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொலையில் பயன்படுத்தப்பட்ட கயிற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தக் கொலையில் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Face book

இதையும் வாசிக்க –

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!