பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய தளங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம், தனது தளங்களின் பாதுகாப்பு குறித்துப் பொய்களைக் கூறி நுகர்வோரை ஏமாற்றியதாக நியூ மெக்சிகோ நடுவர் மன்றம் (Jury) தீர்ப்பளித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அதிகபட்ச தண்டனையாக மொத்தம் 375 மில்லியன் டொலர் அபராதத்தை மெட்டா செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திய வெளியிட்டுள்ளன.
தமது தயாரிப்புகள் சிறுவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மெட்டா நிர்வாகிகள் அறிந்திருந்தனர். சொந்த ஊழியர்களின் எச்சரிக்கைகளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை,” என நியூ மெக்சிகோ சட்ட மா அதிபர் ரவுல் டோரஸ் (Raúl Torrez) சாடியுள்ளார்.
எந்தவொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விசாரணையில், சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மெட்டாவின் வடிவமைப்பு வசதியாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
மெட்டாவின் உள்நாட்டு ஆவணங்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களின் சாட்சியங்கள் இதற்கான ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், குறித்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப் போவதாக மெட்டா அறிவித்துள்ளது.
“தொடர்ந்தும் எமது தரப்பு நியாயங்களை வாதிடுவோம். பதின்ம வயதினரைப் பாதுகாப்பதில் எமது சாதனைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, என மெட்டா பேச்சாளர் ஆண்டி ஸ்டோன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற பல வழக்குகள் மெட்டா மற்றும் யூடியூப் (YouTube) நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களிலும் நடைபெற்று வருகின்றன. சமூக வலைத்தளங்கள் சிறுவர்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸ்னாப்சாட் (Snapchat) மற்றும் டிக்டொக் (TikTok) ஆகிய நிறுவனங்கள் இவ்வாறான வழக்குகளில் நீதிமன்றத்திற்கு வெளியே சமரச தீர்வை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
