ஈரான்-இஸ்ரேல் போரின் விளைவுகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை வழங்க தேசிய பாதுகாப்பு பேரவையை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறப்பு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ள அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்படுவது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் என்றும், ஈரானிய நாடாளுமன்றத்தின் முடிவின்படி ஹார்முஸ் நீரிணையை மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20-30 வீதத்திற்கும் அதிகமானவை மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் 1/3 க்கும் அதிகமானவை இந்த நீரிணை வழியாகச் செல்வதால், எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயரும் என்று பல கட்சிகள் எச்சரிக்கின்றன.
ஒரு நாடு என்ற வகையில், நாம் வேடிக்கை பார்க்காமல், தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டத்தை நடத்தி, எழுந்துள்ள கடுமையான பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் எரிசக்தித் துறையில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்ய மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்தியா தற்போது ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை அதிகரித்துள்ளது என்றும், ஒரு நாடாக நாமும் நடவடிக்கை எடுத்து மத்திய கிழக்கில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் ஏதேனும் வேலை இழப்புகள் ஏற்பட்டால், அது நாட்டை கடுமையாக பாதிக்கும் என்றும், இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளார்.