அபுதாபி தாக்குதல் சம்பவத்தில் கம்பளையைச் சேர்ந்த 25 வயது இளைஞன் உயிரிழந்த நிலையில், குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கொண்ட விரைவு நடவடிக்கையால் சடலம் இலங்கை கொண்டுவரப்பட்டது.
அபுதாபியில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த கம்பளை – அத்கால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாமிக இஷான் லியனகே என்ற இளைஞனின் சடலம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இறுதிக்கிரியைகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அபுதாபியில் பணிபுரிந்து வந்த இந்த இளைஞர், கடந்த 15ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இளைஞனின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முறையான ஒத்துழைப்பு வழங்காமல் பொறுப்பிலிருந்து விலக முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சிங்கப்பூரிலிருந்து உடனடியாக நாடு திரும்பிய தாயாரும் உறவினர்களும் சட்டம் சார்ந்த ஆவணங்களைத் தயாரித்து அபுதாபி நிறுவன அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள முயன்றும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வேறு வழியின்றி நிர்க்கதிக்குள்ளான குடும்பத்தினர் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அவசர குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.
குடும்பத்தினரின் மனுவை உடனடியாகப் பரிசீலித்த பிரதமர், பிரதமர் செயலகத்திற்கு பிறப்பித்த அவசர உத்தரவைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சு மற்றும் தூதரக அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் சடலத்தை விரைவாக நாட்டுக்குக் கொண்டுவரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சடலம், கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு நீதவான் உத்தரவின் பேரில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், தலையில் ஏற்பட்ட பலத்த அடியினால் இரத்தம் உறைந்தமையும் உடலின் பல இடங்களில் காணப்பட்ட காயங்களுமே மரணத்திற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவரை அபுதாபி பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
