ஈரான் மீதான தாக்குதல்களுக்கு தங்களின் ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதியில்லை என்று ஸ்பெயின் அறிவித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி அமெரிக்கா தனது விமானங்களை அங்கிருந்து வேறு இடத்துக்கு நகர்த்தி உள்ளது. நேட்டோ கூட்டமைப்பில் அமெரிக்காவுடன், ஸ்பெயின் உள்ள நிலையில் இந்த அனுமதி மறுப்பு டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து போர் புரிந்து வருகின்றன. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் மீதும், அமெரிக்காவின் தளங்கள் அமைந்துள்ள அரபு நாடுகளை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஈரான் மீதான தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே தான் ஈரான் மீதான தாக்குதல்களுக்குத் தங்களின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு, ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்துள்ளது. அமெரிக்காவும், ஸ்பெயினும் ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உள்ளன. இதனால் அமெரிக்கா தனது போர் விமானங்களை ஸ்பெயினின் ரோடா மற்றும் மோரோன் ராணுவ தளங்களில் நிறுத்தி வைத்திருந்தது.
இந்த போர் விமானங்களை கொண்டு ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டது. ஆனால் அதற்கு ஸ்பெயின் அனுமதி மறுத்தது. இது டிரம்புக்கு பின்னடைவானது. இதனால் வேறு வழியின்றி அமெரிக்க தனது போர் விமானங்களை ஸ்பெயினில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
இதுதொடர்பாக ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பெரெஸ் கூறுகையில், ” ஐநா சபையின் சாசனத்திற்கு முரணான எந்தவொரு செயலுக்கும் தங்கள் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
