செம்மணியில் நடந்தது இன அழிப்பு தான் என்பதை தெளிவாக காட்டுவதுதான் செம்மணியில் மீட்கப்படுகின்ற மனித எலும்புக்கூடுகள். சோமரத்ன ராஜபக்ச என்ற மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்திருக்கிறார் கொன்று தருவது அவர்களின் வேலை புதைப்பது எனது வேலை, கொல்வதும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று.
இதைப்பார்க்கும் போது ஒரு கொலைக்களம் ஒன்று அங்கே நடத்தப்பட்டிருக்கிறது.அந்த கொலைக்களத்திலே படு பாதகமான செயலை செய்த கடந்த அரசுகள் ,தமிழ் மக்களை ஒரு விலங்குகளாககூட மதிப்பதற்கு விருப்பமில்லை அந்தளவு அவர்களுடைய மனதிலே இனவெறி என்பது ஆழமாக ஊன்றி இருந்ததன் காரணத்தால் தான் இந்த செம்மணி என்ற புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது என பொதுமகன் ஒருவர் எமது ஊடகத்தால் செம்மணி புதைகுழி தொடர்பில் எடுக்கப்பட்ட மக்கள் கருத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன.
முதலாம் கட்ட அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டத்தின் முதல் 15 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு என மொத்தமாக 24 நாள்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் எமது ஊடகம் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தது.