குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்ட பெண்ணிற்கு இறுதிச் சடங்கு செய்த சம்பவம் ஒன்று இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பதிவாகியுள்ளது.
நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணகஞ்சில் பகுதியில் உள்ள ஒரு குடும்பம், உயிருடன் இருக்கும் தங்களின் மகளுக்கு இறுதிச் சடங்கைச் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறிய 12 வது நாளில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டுள்ளது. முதலாமாண்டு கல்லூரி மாணவியான அந்தப் பெண், குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு எதிராகச் தனது காதலனுடன் சென்றதாக கூறப்படுகின்றது.

பெண்ணின் இந்த முடிவை ஏற்க மறுத்த குடும்பத்தினர், அந்தப் பெண் இறந்துவிட்டதாக அறிவித்து, தலையை மொட்டையடித்து இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
மேலும், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட உடைமைகளை எரித்தும் உள்ளனர். இந்த இறுதிச் சடங்கு முழு மத ஒழுங்குகளுக்கு அமைய செய்யப்பட்டதாகவும், உறவினர்களும் இதில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது.
பெண்ணிக் புகைப்படம் ஒன்றுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மதகுரு ஒருவர் அழைத்துவரப்பட்டு, உயிரிழந்த ஒருவருக்கு செய்யும் அனைத்து காரியங்களும் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
“எங்கள் வீட்டுப் பெண் எங்களுக்குச் செய்த அவமானத்தை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது எங்களின் எதிர்ப்பு,” என்று பெண்ணின் தாய் கூறியதுடன், இறுதிச் சடங்குகளை செய்யும் தனது நிலைப்பாட்டிலும் உறுதியாக இருந்தார்.
தகவல்களின் படி குறித்த பெண் இதற்கு முன்னரும் ஒருமுறை வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றதாக கூறப்படுகின்றது. எனினும், குடும்ப உறுப்பினர்கள் அந்தப் பெண்ணை அழைத்து வந்துள்ளனர்.
இதன்படி, குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறிய நாளை அவரது மரணத்தின் அடையாளமாக ஏற்றுக்கொண்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்..
பெண்ணின் தந்தை இஸ்ரேலில் பணியாற்றி வருவதாகவும், எனினும் இந்தச் சம்பத்தால் அவர் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடும்பத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும், தங்களுக்கு ஏற்பட்டதாக அவர் நம்பும் “அவமானத்தை” சமாளிப்பதற்கும் ஒரு வழியாக அவர் இறுதிச் சடங்கு செய்யும் இந்த நடவடிக்கையை ஆதரித்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.