இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நாளை 25 ஆம் திகதி யாழுக்கான விஜயத்தின் போது அங்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவிருப்பதுடன், செம்மணி மனிதப்புதைகுழியையும் சென்று பார்வையிடவுள்ளார்.

இந்நிலையில், நேற்று (23) கொழும்பை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கரை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 3 தசாப்த கால யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிராக இடம்பெற்ற மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை (23) இரவு நாட்டை வந்தடைந்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடங்கலாக அரச கட்டமைப்பின் முக்கிய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.
இன்றையதினம் மாலை 4.30 மணிக்கு பாராளுமன்றக் கட்சித்தலைவர்களை பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்.
மாலை 5.30 மணிக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்ரகள், மதத்தலைவர்கள், இராஜதந்திரிகள் என சுமார் 300 பேர் பங்கேற்கும் சந்திப்பிலும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிலையில், நாளை புதன்கிழமை (25) கண்டிக்குப் பயணம் செய்து அங்கு தலதா மாளிகையில் மதவழிபாடுகளில் ஈடுபடுவதுடன். அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடவுள்ள வோல்கர் டேர்க், நாளைய தினமே திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி, நாளையதினம் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநதிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ள உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை ஒருமித்துச் சந்திக்கவுள்ளார்.
அதுமாத்திரமின்றி அவர் யாழ். விஜயத்தின்போது அண்மையில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடங்கலாக 19 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதியையும் சென்று பார்வையிடவுள்ளார்.