ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு தமிழருக்கு தீர்வல்ல: லண்டனில் கறுப்பு நாள் பேரணி

பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களினால் இலங்கையின் சுதந்திர தினமான நேற்று (04.02.2026) லண்டனில் கறுப்பு நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானியாவைச் சேர்ந்த பல்வேறு ஈழத்தமிழ் அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்று, இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள் என்பதைக் குறிக்கும் வகையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் இடம்பெற்றது.

இப்பேரணியானது, பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆரம்பித்து, லண்டனின் trafalgar சதுக்கம் வரை நகர்ந்து, பிரித்தானிய மன்னரை நோக்கி பிரித்தானிய மன்னர் மாளிகை வரை மக்கள் பேரலையாக முன்னேறி நிறைவடைந்தது. “தமிழீழமே ஒரே தீர்வு” என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, பேரணி முழுவதும் எழுச்சிமிகு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

குறிப்பாக, வடக்கு-கிழக்குத் தமிழர் தாயகத்தில் தொடரும் அடக்கு முறைகளுக்கு எதிராகவும், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியினை நிலைநாட்டல் போன்ற விடயங்களை வலியுறுத்தி, ​பேரணியில் ஈடுபட்டவர்கள் “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “இலங்கை அரசு பயங்கரவாத அரசு”, “ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களின் கரிநாள்” போன்ற கோஷங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், முழக்கங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் எழுச்சிபூர்வமாகப் பங்கேற்றனர்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழருக்கு தீர்வு வழங்கப்படவேண்டும் இலங்கை அரசு கொண்டுவரவிருக்கும் ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு தமிழருக்கு ஒருபோதும் தீர்வாகாது இவ்வரசியலமைப்பு அடிப்படையில் இலங்கை அரசு எம்மை அடக்கி ஒடுக்க முற்படுகிறது

தமிழ் அரசியல் தலைவர்கள் ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும்.இலங்கை அரசு கொண்டு வரவிருக்கும் எந்தப் புதிய தீர்வுத் திட்டத்திலும், ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு என்ற விடயத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் ஒரே கொள்கைகளையே பின்பற்றுகின்றன. அவர்கள் ஒருபோதும் மாறுபட்ட சிந்தனையுடன் தமிழர்களுக்கு தீர்வு வழங்க முன்வரத்தயாராக இல்லை. இந்நிலைமை தற்போதுள்ள அனுர அரசிலும் தொடர்கிறது.

அனுர அரசின் காலத்திலும் தமிழர் தாயகத்தில் நில ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் குடியேற்றம் திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது. இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.தமிழ் பகுதிகளில் புதியதாக விகாரைகள் முளைவிடுகின்றன. தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுடன் இவ்விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன இவை அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழர் விடயத்தில் பிரித்தானிய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு பிரித்தானிய அரசால் சுதந்திரம் வழங்கப்பட்ட போதே, தமிழர்களின் சுதந்திரம் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களால் பறித்தெடுக்கப்பட்டுவிட்டது. தமிழர்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயப்பொறுப்பு பிரித்தானிய அரசுக்கும், பிரித்தானிய மன்னருக்கும் உள்ளது.

தமிழர் தீர்வு விடயத்தில் நல்லதொரு திருப்புமுனையை ஏற்படுத்த,பிரித்தானிய அரசு கரிசனையுடன் செயல்பட வேண்டும் அந்த தார்மிகப் பொறுப்பு பிரித்தானிய அரசிடம் இருப்பதாக நாம் உணர்கிறோம்; அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி அதிகாரம் ஆகிய அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான தமிழீழ தன்னாட்சி அதிகாரமே தமிழருக்கான நிரந்தர தீர்வு என வலியுறுத்தியவாறு, இந்த கறுப்பு நாள் பேரணி பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

negombo prison
நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவம்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசேட குழு
gotabaya rajapaksa
கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு: உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை
arrest
சென்னையிலிருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு: குடிவரவு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் கைது!
negombo prison issue
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த 4 அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்!
negombo prison
மோதல்களினால் இரத்தக் களரியான நீர்கொழும்பு சிறைச்சாலை: கட்டுக்கடங்காத வன்முறையின் பின்னணி
negombo prison
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல்: அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் வரை காயம்!