ஒடிசா மாநிலத்தில் நீண்ட காலமாக கிராமப்புறப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படும் 60 வயது நபர், பாதிக்கப்பட்ட பெண்களின் குழுவினரால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 3ஆம் தேதி இரவு, குற்றச்சாட்டுகளுக்குள்ளான அந்த நபர், தனது வீட்டிலேயே பெண்கள் குழுவினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைக்குப் பின்னர், அவரது உடல் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பொலிஸார் நடத்திய விசாரணையில் 8 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களில் ஆறுபேர், தாங்களும் அந்த நபரால் பாலியல் தொல்லைக்குள்ளானவர்கள் என ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு கிராமங்களில் உள்ள பெண்களுக்கு அந்த நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. பலமுறை எச்சரிக்கையைக் கூறியும், அவர் தனது செயல்களை நிறுத்தவில்லை என பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் உடலின் எஞ்சிய பாகங்களை மீட்டு, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நபருக்கு எதிராக இதற்கு முன் எந்தவிதமான புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், தற்போது வழக்குப்பதிவு செய்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாயும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
