ஜனாதிபதிக்கு 75 சதவீதமான மக்கள் ஆதரவு வழங்குவதாக வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
புத்தளம் தேர்தல் தொகுதியில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், நாட்டின் பாதி மக்கள் உணவுக்காக சிரமப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஜனாதிபதிக்கு 75 சதவீத ஆதரவு இருப்பதாக கூறப்படுவது முரண்பாடாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மக்கள் உணவுக்காக போராடும் நிலையில், அவர்கள் மூன்று வேளை உணவு கிடைக்காதபோது ஒரு அரசாங்கத்தை ஆதரிப்பதாக கூற முடியுமா? எனவே இந்த அறிக்கைகளில் எது உண்மை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், பொருளாதார சிரமங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.
கலாசார மற்றும் மத பெறுமதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அதிக வரிகள் விதிக்கப்படுவதாகவும், மருந்து தட்டுப்பாடு மற்றும் மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் போன்ற பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு மாறாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்க காலத்தில் வரிகள் குறைக்கப்பட்டதாகவும், கொவிட் காலத்திலும் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டதாகவும், துறைமுக நகரம், தாமரை கோபுரம் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரச ஊழியர்கள், தொழில் முனைவோர், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக அரசாங்கத்தை அவர் விமர்சித்தார்.
அச்சுறுத்தல்கள் மூலம் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியாது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று செயற்படுவதன் மூலமே அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, அடிமட்டத்தில் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செயற்படுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
