யுத்தத்தை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மற்றும் ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் யுத்தம் முழுமையாக முடிவுக்கு வரும் என்றும் 12 நாட்கள் நடைபெற்ற போர் முடிந்துவிட்டதாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதுவரை யுத்தநிறுத்தம் குறித்து உடன்பாடு எதுவுமில்லை – ஈரானின் வெளிவிவகார அமைச்சர்
இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் ஈரான் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளாது என தெரிவித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் செயத் அபாஸ் அராக்சி தற்போது வரை யுத்த நிறுத்தம் குறித்த உடன்பாடு எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் உள்ளுர் நேரப்படி நான்கு மணிக்குள் தாக்குதலை நிறுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆனால் அவர் குறிப்பிட்ட நேரம் கடந்துவிட்டது.
இஸ்ரேலே தாக்குதலை ஆரம்பித்தது ஈரான் இல்லை என்பதை ஈரான் மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுவரை யுத்த நிறுத்தம் தொடர்பிலோ மோதல் நிறுத்தம் தொடர்பிலோ எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை,என அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் யுத்த நிறுத்த தகவல் முற்றிலும் பிழையானது – ஈரான் ஊடகம்
ஈரான் இஸ்ரேல் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருப்பது முற்றிலும் பிழையான தகவல் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புபட்ட ஈரானின் பார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஈரானின் செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ அல்லது உத்தியோகபூர்வமற்ற யுத்த நிறுத்த யோசனைகள் எவையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள் ஈரானிய வட்டாரங்கள் தனது நடவடிக்கை மூலம் இந்த செய்தி தவறானது என்பதை விரைவில் ஈரான் இஸ்ரேலிற்கு வெளிப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளன
