NDB வங்கி (PLC) நிறுவனத்தில் கணிசமான நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளக மோசடி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி காரணமாக வங்கியின் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகளோ அல்லது வைப்புகளோ பாதிக்கப்படவில்லை என NDB வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான விபரங்கள் இலங்கை மத்திய வங்கிக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

வங்கி வழங்கிய தகவல்களின் அடிப்படையில், நிதித் தாக்கம் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீடுகளை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.
இதன்படி குறித்த நட்டம் ஏற்பட்ட போதிலும், வங்கியின் மூலதனப் போதுமை (Capital Adequacy) மற்றும் திரவத்தன்மை (Liquidity) ஆகியன ஒழுங்குமுறைப்படுத்தல் மட்டங்களுக்கு மேலேயே காணப்படுகின்றன.
வங்கியின் நிதி நிலைப்புத்தன்மை குறித்து இலங்கை மத்திய வங்கி திருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி நிலைமைகளைத் தொடர்ந்து அவதானித்து வருவதுடன், தேவைப்படின் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராக உள்ளது.
அத்துடன், ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாக, தற்காலிகத் திரவத்தன்மைத் தேவைகளுக்காக (Temporary Liquidity) மத்திய வங்கியை அணுகும் வசதி NDB வங்கிக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வங்கியின் உள்ளகக் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
