கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் (Memorandum of Understanding) தற்போது முழுமையாக முறிவடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்ற நேட்டோ (NATO) மாநாட்டிற்கு முன்னதாகப் பேசிய அவர், ஈரானுடனான இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கை “முடிவுக்கு வந்துவிட்டது” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிக்னல் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து, சர்வதேசக் கடல் எல்லையான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) பயணித்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் அண்மையில் தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாகவே இந்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மத்திய கட்டளையகம் (CENTCOM) ஈரானில் உள்ள சுமார் 90 இராணுவ இலக்குகளைக் குறிவைத்து அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை நிலைநாட்டவும், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் திறனை முடக்கவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் ஈரானின் கடலோர ரேடார் தளங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ட்ரோன் தளங்கள் ஆகியவை முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அதேவேளை, தென்மேற்கு ஈரான் பகுதியில் உள்ள அணுமின் நிலைய வளாகத்திற்கு அருகாமையிலும் வெடிப்புச் சத்தங்கள் பதிவாகியுள்ளன. இத்தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை அதிகாரி ஒருவர் உட்படப் பல இராணுவப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் இந்த வான்வழித் தாக்குதலுக்கு ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) மிகக் கடுமையான ஏவுகணைப் பதிலடித் தாக்குதலை உடனே தொடுத்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க படைகளுக்கு ஆதரவளிக்கும் மற்றும் தளம் அமைத்துக் கொடுத்துள்ள பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் சுமார் 85 ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது.
இதன் காரணமாக பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் வான்வழித் தாக்குதலுக்கான அவசர எச்சரிக்கை சைரன்கள் பலமுறை ஒலிக்கவிடப்பட்டன. தங்களுடைய இறையாண்மையை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு எந்தவொரு நாடு இடம் கொடுத்தாலும், அந்த நாடும் ஈரானின் நேரடி இராணுவ இலக்காக மாறும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது.
இந்தத் திடீர் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளதுடன், உலகப் பங்குச்சந்தைகளும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுமே தங்களின் தாக்குதல் பலத்தை அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Source: The Guardian, The Hindu, Associated Press (AP) News.
